புத்ராஜெயா, பிப். 7 - மக்கள் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அம்சத்திலும் தங்களின் செயல் திறனை மேம்படுத்துமாறு அனைத்து அமைச்சுகள் மற்றும் அரசு துறைகளைப் பிரதமர் டத்தோ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். இன்று நடைபெற்ற பிப்ரவரி மாதத்திற்கான பிரதமர் துறை ஊழியர்களுடனான மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய அன்வார், நாட்டின் நிர்வாகத்தின் கண்ணியத்தை உயர்ந்த குறிப்பாகப் பாராட்டத்தக்க நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய சவால் என்று கூறினார். தலைவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளை நேர்மையாக நிறைவேற்றினால் அனைத்து வகையான அடக்குமுறைகளில் இருந்தும் மக்களை விடுவிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். தலைவர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் விசுவாசம் மக்களை அனைத்து வகையான அடக்குமுறைகளிலிருந்தும் விடுவிக்கும். தங்கள் அடிப்படை உரிமைகள் புறக்கணிக்கப்படும் அளவுக்கு மக்கள் ஏமாற்றபட்டுள்ளனர் என்றார். அமலாக்கத்துறையில் இன்னும் அலட்சியம் இருப்பதாகக் கூறிய அவர் அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றார். எந்தவொரு உரிமத்தையும் (லைசென்ஸ்) பெறுவதற்கு நீங்கள் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டும் என்கிற நிலைமை நீடிக்கிறது என்றால் என்னைப் பொறுத்தவரை அதை சரிசெய்ய வேண்டும் என்று அன்வார் மேலும் சொன்னார்.