கோலாலம்பூர், ஏப் 14- அரசாங்க மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நெரிசலைக் குறைப்பதற்கான முன்னோடித் திட்டத்தை சுகாதார அமைச்சு ஸ்டார் எனப்படும் பொதுச் சேவைத் துறை சீர்திருத்த சிறப்பு பணிக்குழு மற்றும் அது சார்ந்த அமைச்சுகள் மற்றும் துறைகளுடன் அமல்படுத்தி வருகிறது.
பொது மக்கள் எதிர்நோக்கி வரும் சிரமங்களைக் களைவதற்கு ஸ்டார் குழு முன்னெடுத்துள்ள பித்தாரா மடாணி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது என்று அதன் அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நேற்று நடைபெற்ற மலேசியா மடாணி நடவடிக்கை மன்றத்தின் கூட்டத்தில் அரசாங்க மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரிப்பால் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதற்கு அமல்படுத்தப்பட்டுள்ள முன்னோடித் திட்டத்தின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த முன்னோடித் திட்டம் கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையிலும் பண்டார் பொட்டானிக் சுகாதார கிளினிக்கிலும் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஆபத்தில்லா நோயாளிகளுக்கான பச்சை மண்டல சிகிச்சைப் பிரிவு பண்டார் பொட்டானிக் சுகாதார மையத்திற்கு மாற்றப்பட்டு அந்த கிளினிக்கின் சேவை நேரம் இரவு 9.20 மணி வரை நீட்டிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
இந்த நடவடிக்கையை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வரை கிள்ளான் மருத்துவமனையின் பச்சை மண்டலத்திற்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 54 விழுக்காடு குறைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.