கோல சிலாங்கூர், மே 7; கோல சிலாங்கூர், புக்கிட் மெலாவத்தி தொகுதி ஏற்பாட்டில் குறுக்கோட்டப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. ஆன் லைன் மூலம் இந்தக் குறுக்கோட்டப் போட்டிக்கான பதிவு மேற்கொள்ளப் பட்டது. அதில் சுமார் 2000 – போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
5-கிலோ மீட்டர்,10 – மீட்டர் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இக்குறுக் கோட்டப் போட்டியில் வெளிநாடு மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டதால் பொது மக்களின் ஆர்வத்தைத் தூண்டியது. அதனால் அதிகமானோர் இக் குறுக்கோட்டப் போட்டியைக் காணச் சாலை நெடுகிலும் குவிந்தனர்.
போட்டி பார்ப்பதற்குப் பரவசமாக இருந்ததாகப் போட்டியைக் காண வந்திருந்தவர்கள் சிலாங்கூர்கினியிடம் கூறினர். விறு-விறுப்பாக தொடங்கிய இக் குறுக்கோட்டப் போட்டியின் முடிவில் 5 – கிலோ மீட்டர் பிரிவில், ஓட்டத்தை ஓடி முடித்த முதல் 5 – போட்டியாளர்களும், 10 -கிலோ மீட்டர் பிரிவில் , ஓட்டத்தை ஓடி முடித்த முதல் 5 – போட்டியாளர்களும் வெற்றி பெற்றனர்.
அதில் 10 -கிலோ மீ்ட்டர் போட்டியில் 1 -ஆம் நிலையில் கென்யா நாட்டைச் சேர்ந்த பெனடிக் (700 ரிங்கிட்), 2 -ஆம் நிலையில் கென்யா நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் (500 ரிங்கிட்) மற்றும், 3 – ஆம் நிலையில் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய்(300 ரிங்கிட்) வெற்றி பெற்றனர்.
காலை 6:45 -க்கு தொடங்கிய இக் குறுக்கோட்டப் போட்டி சிறப்பு வருகையாளர் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை துணை அமைச்சர் மாண்புமிகு ஆடாம் அட்லி அப்துல் ஹலிம் இந்தக் குறுக்கோட்டப் போட்டியைத் தொடக்கி வைத்தார்.
அதிகமான பார்வையாளர்கள் வந்திருந்ததால் பல சிறு வியாபாரிகளும் தண்ணீர் , பலகாரங்கள் மற்றும் உணவுகளை விற்க கடைகள் போட்டனர். அது , உள்ளூர் உணவு வகைகளைப் பிரபலப்படுத்தவும் இங்கு வந்திருந்தவர்களின் பசியைத் தீர்ப்பதற்கும் இலகுவாக இருந்தது.
நிறைவாகக் குறுக்கோட்டப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் கோலசிலாங்கூர் புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிக்க ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி பரிசுகளை எடுத்து வழங்கினார்.
அதுமட்டும் இன்றி அவருடன் கோலசிலாங்கூர் மாவட்ட மன்றம் நகராண்மை கழக துணைத் தலைவர் துவான் யூஸ்லி , மாவட்ட மன்ற நகராண்மை கழக உறுப்பினர்கள், மற்றும் அரசு சாரா இயக்கத் தலைவர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.