கோம்பாக், மே 15- மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் அய்டில்பித்ரி நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு சிறப்பாக நடைபெற்று முடிந்த வேளையில் ஒவ்வொரு நிகழ்விலும் 10,000 முதல் 35,000 பேர் வரை கலந்து சிறப்பித்தனர்.
இந்த பொது உபசரிப்புக்கு பொது மக்கள் வழங்கி வரும் ஆதரவைக் கருத்தில் கொண்டு இந்த மாவட்ட நிலையிலான கொண்டாட்டத்தை வருடாந்திர நிகழ்வாக நடத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சூழ்நிலையைப் பொறுத்து இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இதனை வருடாந்திர நிகழ்வாக நடத்துவதற்கான சாத்தியத்தை நாங்கள் ஆராய உள்ளோம். உண்மையில் இந்த பொது உபசரிப்பு நிகழ்வு கடந்தாண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பை ஒரே இடத்தில் பெரிய அளவில் நடத்தினால் கூடுதல் செலவும் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும். மாவட்ட ரீதியாக நடத்தப்படும் போது செலவு ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தாலும் சிறிளவு தொகையை மிச்சப்படுத்த இயலும் என்றார் அவர்.
மாவட்ட நிலையில் நடத்தப்பட்ட நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு நிகழ்வுகளுக்கு பல்வேறு அரசு துறைகள் முழு ஒத்துழைப்பையும் நல்கியதாக அவர் சொன்னார்.
இத்தகைய பொது உபசரிப்பு நிகழ்வுகளை தனித்தனியாக அல்லாமல் மாநில அரசுடன் சேர்ந்து நடத்தும்படி மாவட்ட நில அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்றங்களுக்கு நாங்கள் அழைப்பு விடுத்திருந்தோம் என் அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள தாமான் ஸ்ரீ கோம்பாக்கில் நேற்று நடைபெற்ற கோம்பாக் மாவட்ட நிலையிலான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மத்திய அரசின் மலேசியா மடாணி நோன்புப் பெருநாள் பொது உபசரிப்புடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் சுமார் 35,000 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமை தாங்கினார்.