ஷா ஆலம், ஜூன் 4- இன்று அதிகாலையில் பெய்த அடை மழை
காரணமாக ஈஜோக்கில் உள்ள கார் பழகும் மையத்தின் பணியாளர்கள்
எழுவர் அம்மையத்தின் அலுவலகத்தில் சுமார் 30 நிமிடங்கள் சிக்கிக்
கொண்டனர்.
வெள்ளம் தொடர்பில் இன்று காலை 10.17 மணியளவில் அவசர அழைப்பு
கிடைத்த தொடர்ந்து தீயணைப்புக் குழுவினர் காலை 11.02 மணியளவில்
சம்பவ இடத்தை அடைந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும்
மீட்புத் துறையின் இயக்குநர் வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில்
கூறினார்.
பெஸ்தாரி ஜெயா தீயணைப்பு நிலையத்திலிருந்து தமது துறையின்
உறுப்பினர்கள் சம்பவ இடத்தை அடைந்த போது அப்பகுதி சுமார் ஒரு
மீட்டர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதைக் கண்டதாக அவர் தெரிவித்தார்.
மலாயன் காரோட்டும் பள்ளியின் ஏழு பணியாளர்கள் அந்த பள்ளியின்
அலுவலகத்தில் சிக்கிக் கொண்டிருந்தனர். தீயணைப்பு வீரர்கள்
படகுகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை வெள்ளத்திலிருந்து
மீட்கும் பணியில் ஈடுபட்டனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.
வெள்ளத்தில் சிக்கிய ஒரு ஆண் உள்ளிட்ட அனைவரும் 18 முதல் 55
வயது வரையிலான உள்நாட்டினர் என்றும் அவர் குறிப்பிட்டார்.