ECONOMYMEDIA STATEMENT

பெர்மாத்தாங் தொகுதியில் திருமண சீர் தட்டு அலங்கரிப்பு பயிற்சி

கோலா சிலாங்கூர், ஜூன் 4- நமது பாரம்பரியத்தை அடிப்படையாக கொண்ட திருமணம், நிச்சயதார்த்தம், வளைகாப்பு போன்ற புனித நிகழ்வுகளில் சீர் தட்டு எடுப்பது வழக்கமான சடங்காக விளங்குகிறது.

ஆடை, அணிகலன்கள், நகைகள், வளையல், பழ வகைகள், இனிப்புகள் உள்ளிட்ட பொருட்களை காண்போரை கவரும் வகையில்  தட்டுகளில் நேர்த்தியான முறையில் அலங்கரிப்பது ஒரு தனிக் கலையாகும்.

இந்த சீர் தட்டு அலங்காரம் என்பது ஒரு சம்பிரதாயத்தின் பிரதிபலிப்பாக  மட்டுமின்றி உபரி வருமானம் ஈட்டக் கூடிய ஒரு தொழிலாகவும் தற்போது மாறி வருகிறது. குறைந்த வருமானம் பெறும் தரப்பினர் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கு ஏதுவாக அது தரப்பினருக்கு இக்கலை உள்ளிட்ட பல்வேறு பயிற்சித் திட்டங்களை சித்தம் எனப்படும் சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர் மையம் தற்போது மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது.

அந்த வகையில் பெர்மாத்தாங் தொகுதி  இந்திய சமூகத் தலைவர் கே.பத்மநாபன் ஆதரவுடன் தஞ்சோங் காராங், கம்போங் சுங்கை தெராப் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வளாகத்தில் திருமண சீர் தட்டு அலங்கரிப்பு பயிற்சி கடந்த 3ஆம் தேதி நடத்தப்பட்டது.

பிற்பகல் 2.00 மணி தொடங்கி இரவு 7.00 மணி வரை நடைபெற்ற இந்த பயிற்சியில்  சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டனர். பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் அலங்கரிப்பு பணிக்கு தேவையான அடிப்படை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

சீர் தட்டு அலங்கரிப்பது தொடர்பான நுணுக்கங்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் பெற்றதோடு இதன் மூலம் உபரி வருமானம் பெறுவதற்குரிய வாய்ப்பையும் அவர்கள் பெற்றதாக பத்மநாபன் கூறினார்.

இந்த நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு உதவிய சித்தம் நிர்வாகி எஸ். கென்னத் சேம் மற்றும் சித்தம் பொறுப்பாளர்களுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கோல சிலாங்கூர் கெ அடிலான் தொகுதி தலைவர் தீபன் சுப்பிரமணியம் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Pengarang :