NATIONAL

காதலியின் குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததாக நம்பப்படும் ஆடவர் கைது

கோலாலம்பூர், ஜூன் 9: நேற்று இரவு ஜிஞ்ஜாங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது காதலியின் குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததாக நம்பப்படும் 31 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

வங்சா மாஜு மாவட்டத் துணைக் காவல்துறைத் தலைவர் டி.எஸ்.பி. டி.சரலாதனைத் தொடர்பு கொண்டபோது, அந்நபர் கைது செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மேலும், இன்றே தடுப்பு காவலில் வைப்பதற்கான உத்தரவுக்கு விண்ணப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

“தற்போது கோலாலம்பூர் காவல்துறை தலைமையகத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் குற்றப்பிரிவு (D11) மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் விரைவில் ஒரு அறிக்கையை வெளியிடுவார்” என்று அவர் கூறினார்.

நேற்று, செத்தாபக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வயது மற்றும் 11 மாத பெண் குழந்தை தனது தாயின் காதலனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக நம்பப்படும் வீடியோ வைரலாக பரவியது.

உடலின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டு, உதடுகள் வீங்கி, இரு கண்களிலும் காயங்களுடன் இருந்த அக்குழந்தை, தற்போது கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் குழந்தை சத்தம் எழுப்பியது தான் தாக்கப்பட்டதற்கு காரணம் என்றும், சந்தேக நபரைத் தடுக்க அவரது தாயார் முயற்சி செய்ததாகவும், ஆனால் முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

– பெர்னாமா


Pengarang :