NATIONAL

தாதியரின் பணி நேரத்தை அதிகரிக்கும் முடிவை தற்காக்கிறார் சுகாதர அமைச்சர்

கோலாலம்பூர், டிச. 12- மருத்துவமனை வார்டுகளில் பணியாற்றும்
தாதியரின் வேலை நேரத்தை பொதுச் சேவைத் துறையின் புதிய சம்பளத்
திட்டத்தின் (எஸ்.எஸ்.பி.ஏ.) கீழ் மூன்று மணி நேரம் அதிகரிக்கும்
அரசாங்கத்தின் முடிவை சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி
அகமது தற்காத்து பேசியுள்ளார்.

எஸ்.எஸ்.பி.ஏ. வழிகாட்டியின் படி அதிகரிக்கப்படும் இந்த வேலை நேரம்
தொடர்பில் ஏழு தொழிற்சங்கங்கள் மற்றும் தாதியர் சங்கம் உள்பட
பல்வேறு தரப்பினருடன் பல கட்டப் பேச்சவார்த்தையில் தாங்கள்
ஈடுபட்டதாக அவர் சொன்னார்.

இந்த முடிவு ஒரு தலைப்பட்சமாக எடுக்கப்படவில்லை. ஊழியர்
பற்றாக்குறை நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு பிரச்சினை என்பது நாம்
அறிந்த ஒன்று என்பதால் இவ்விவகாரத்தில் பல்வேறு தரப்பினரின்
கருத்துகள் கவனத்தில் கொள்ளப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து நாங்கள் (அமைச்சர்கள்) அமைச்சரவை நிலையிலும்
விவாதித்தோம். பணி நேர அதிகரிப்பு தொடர்பில் அவர்கள் எழுப்பிய
விஷயங்களை நான் நன்கு அறிந்துள்ளேன்.

இந்த விவகாரம் பொதுச் சேவைத் துறையின் புதிய சம்பளத் திட்டத்தில்
இந்த பெற்றுள்ளதால் இதன் தொடர்பில் நாங்கள் தொடர்ந்து
விவாதங்களை நடத்தி வருகிறோம். இந்த திட்டம் முதலில் அமல்
செய்யப்பட வேண்டும் என அமைச்சரவையும் பிரதமரும் விரும்புகின்றனர்
என்று மேலவையில் நேற்று 2025ஆம் ஆண்டிற்கான விநியோக மசோதா
மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர்
குறிப்பிட்டார்.

கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த தாதியருக்கான மூன்று
மணி நேர வேலை நேர அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரின் நிலைப்பாடு
குறித்து செனட்டர் டாக்டர் ஏ.லிங்கேஸ்வரன் கேள்வியெழுப்பியிருந்தார்.
தாதியர் மிகைநேர வேலை செய்ய வேண்டும் என புதிய வழிகாட்டியில்
குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவர்களின் நலன் தொடர்ந்து காக்கப்படும் என
ஜூல்கிப்ளி தெரிவித்தார்.

முன்பு வாரம் 42 மணி நேரமாக இருந்த வேலை நேரம் தற்போது 45 மணி
நேரமாக அதிகரிக்கப்பட்டாலும் இலகுவான ஷிப்ட் நேர வேலைத்
திட்டத்தின் வாயிலாக அவர்களின் நலன் காக்கப்படுவது உறுதி
செய்யப்படும் என்றார் அவர்.


Pengarang :