சுங்கை பூலோ, ஜன. 14- இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் மேலும் ஆக்ககரமானதாகவும் ஆக்கும் முயற்சியாக தெக்குன் நேஷனல் மூலமா 10 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர் ரமணன் இன்று அறிவித்தார்.
பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் இதனை அறிவித்த அவர், ஸ்பூமி கோஸ் பிக் நிதியளிப்புத் திட்டம் மூலமாக 5 கோடி வெள்ளியும் இந்திய சமூக தொழில்முனைவோர் (ஸ்பூமி) நிதித் திட்டத்தின் வாயிலாக மேலும் 5 கோடி வெள்ளியும் இந்நோக்கத்திற்கு பயன்படுத்தப்படும் என்றார்.
சவால் நிறைந்ததாக மாறிவரும் நடப்பு பொருளாதார சூழலில் வணிகங்களை விரிவுபடுத்த உதவும் இந்த இரண்டு முன்னெடுப்புகள் வாயிலாக சுமார் 5,000 இந்திய தொழில்முனைவோர் பயன் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பு (2025 பட்ஜெட்டில்) ஸ்புமி திட்டத்திற்கான ஒதுக்கீடு 3 கோடி வெள்ளியாக மட்டும் இருந்தது. இந்திய சமூகத்திற்கான உதவிகளை அதிகரிக்கும் பொருட்டு இந்திய சமூகத்தின் விவகாரங்களைக் கவனிக்க பிரதமர் என்னை நியமித்துள்ளார்.
ஆகவே தொடக்கக் கட்டமாக தெக்குன் உள் நிதி (உள் நிதி) மூலம் மேலும் அவர்கள் 7 கோடி வெள்ளியை அதிகரிக்கவுள்ளனர். இதன் மூலம் ஸ்புமியின் மொத்த ஒதுக்கீடு இவ்வாண்டு 10 கோடி வெள்ளியாக இருக்கும், இது 2008 க்குப் பிறகு இந்திய சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய தொகையாகும் என்று அவர் கூறினார்.
நிதியைப் பெற ஆர்வமுள்ள இந்திய தொழில்முனைவோர் தெக்குன் இணையதளத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் அல்லது இன்று முதல் அருகிலுள்ள தெக்குன் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பம் செய்யலாம் என்றார் அவர்.
ஸ்புமி திட்டத்தின் கீழ் தெக்குன் தகுதி பெறுநர்களுக்கு 1,000 முதல் 50,000 வெள்ளி வரையிலான நிதியுதவியை வழங்கும். ஸ்புமி கோஸ் பிக் திட்டத்தின் கீழ் 14 நாட்களுக்கு குறைவான கால அவகாசத்தில் (வெ.50,000-வெ.100,000) கடனுதவி வழங்கப்படும் என என்று அவர் தெரிவித்தார்.
இந்த திட்டம் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து நாடு முழுவதும் உள்ள 26,804 இந்திய தொழில்முனைவோருக்கு 50 கோடி வெள்ளிக்கும் அதிகமானத் தொகை கடனாக வழங்கப்பட்டுள்ளதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் ரமணன் குறிப்பிட்டார்.