MEDIA STATEMENTNATIONAL

விபத்தை  புகைப்படம் எடுத்த  பாதசாரி கார் மோதி  கொல்லப்பட்டார்

ஜோகூர் பாரு, ஜனவரி  19 ;-இங்குள்ள சுல்தான் இஸ்கந்தர் நெடுஞ்சாலையின் 14 கிலோமீட்டரில் ஏற்பட்ட  விபத்தை  புகைப்படம் எடுக்கும்போது ஜோகூரை நோக்கி சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்தார்.

ஜோகூர் பாரு வடக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ. சி. பி. பல்வீர் சிங் மகிந்தர் சிங் கூறுகையில்,பாதசாரியான 68 வயதான ஆண்  தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுல்தானா அமினா மருத்துவமனையில் சிகிச்சையின் போது இறந்தார்.

காலை 6:40 மணியளவில் நடந்த சம்பவத்தில், ஜாலான் பிரிஸ்மாவைச் சேர்ந்த 40 வயதான உள்ளூர் நபர் ஜோகூர் பாருவை நோக்கி ஓட்டிச் சென்ற பெரோடுவா அல்ஸா கார், வழியில் கவிழ்ந்து கிடந்த  ஹோண்டா சிஆர்வி காரில் மோதுவதை தவிர்க்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.

இந்த சம்பவத்தின் விளைவாக, சம்பந்தப்பட்ட பெரோடுவா அல்ஸா கார் சறுக்கி அங்கே  முந்தைய விபத்தின் படங்களை எடுத்துக் கொண்டிருந்த பாதசாரி மீது மோதியது.

“பெரோடுவா அல்ஸா காரின் ஓட்டுநருக்கு தலை, முகம், இடது கை மற்றும் வலது காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சாலை போக்குவரத்துச் சட்டம் (ஆர். டி. ஏ) 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக பல்வீர் சிங் கூறினார்.

“அதே நேரத்தில், இந்த வழக்கு தொடர்பான தகவல் உள்ள எவரும் அதை விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் ஓங் ஜின் சியோங்கிற்கு 011-16490168 என்ற எண்ணில் தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர் கூறினார்.


Pengarang :