ஷா ஆலம், பிப் 9- சிலாங்கூர் மாநில அரசின் முன்னெடுப்பாக விளங்கும் இலவச சுகாதார பரிசோதனை திட்டம் பிப்ரவரி முழுவதும் நான்கு இடங்களில் நடைபெறும் என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
இலவச மருத்துவப் பரிசோதனை நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் வருமாறு:
பிப்ரவரி 14: சுல்தான் இட்ரிஸ் ஷா ஷரியா நீதிமன்றக் கட்டிடத்தில் சிலாங்கூர் ஷரியா நீதித்துறை (ஜேக்கஸ்) ,
15 பிப்ரவரி: கம்போங் குன்சி ஆயர் புவாங் சமூக மைய மண்டபம், தஞ்சோங் காராங் (சுங்கை பூரோங் தொகுதி),
22 பிப்ரவரி: கம்போங் சுவாங் ராசா சமூக மண்டபம் (கோல குபு பாரு தொகுதி) ,
23 பிப்ரவரி: மேரு, காப்பார் பொது மண்டபம் (மேரு தொகுதி)
சிலாங்கூர் சாரிங் நிகழ்வுக்கு வருகை தந்து, உடல் பரிசோதனை, இரத்தம், சிறுநீர், புற்றுநோய், கண் மற்றும் பல் பரிசோதனைகளை இலவசமாகப் மேற்கொள்வதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள் என்று ஜமாலியா தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
பங்கேற்பாளர்கள் செலங்கா செயலி வாயிலாக பரிசோதனைக்கு முன்பதிவு செய்ய அழைக்கப் படுகிறார்கள்.
தனி நபர் இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த மருத்துவப் பரிசோதனைச் சேவை வழங்கப்படும். ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் செல்கேர் ஹாட்லைனை 1-800-22-6600 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பின்வரும் நான்கு வழிமுறைகளைப் பயன்படுத்தி சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் பதிவு செய்யலாம்.
1. செலங்கா செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்
2. சிலாங்கூர் சாரிங் பட்டனை அழுத்தவும்
3. கேள்வித்தாள் படிவத்தை பூர்த்தி செய்யவும்
4. மருத்துவப் பரிசோதனை நடைபெறும் இடம் மற்றும் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்
கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தை தொடர மாநில அரசு 2025 வரவு செலவுத் திட்டத்தில் 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
இந்த இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தின் வாயிலாக 2024ஆம் ஆண்டு 7,000 பேர் பயனடைந்ததாகவும் அவர்களில் 38 சதவீதம் பேர் 46 முதல் 64 வயதுடையவர்கள் என்றும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு டிசம்பர் 17 ஆம் தேதிலகூறியிருந்தார்.
குடும்ப மருத்துவ வரலாறு, உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்கள் முன்கூட்டியே நோயைக் கண்டறிய உதவுவதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.