புத்ராஜெயா, மார்ச் 24 – முன்னாள் பிரதமர் சம்பந்தப்பட்ட வழக்கில் பின் சேர்க்கப்பட்ட கூடுதல் ஆவணம் இருப்பது தொடர்பில் மேல்முறையீடு செய்ய அனுமதிக்க கோரும் சட்டத்துறைத் தலைவரின் (ஏ.ஜி.) விண்ணப்பத்திற்கு எதிராக டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தாக்கல் செய்த பூர்வாங்க ஆட்சேபனையை இங்குள்ள கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
சட்டத் துறைத் தலைவரால் முன்மொழியப்பட்ட ஏழு சட்டக் கேள்விகள் புதிய ஆதாரங்களைச் சேர்ப்பது தொடர்பான பிரச்சினையுடன் தொடர்புடையவை என்று மலாயா தலைமை நீதிபதி டத்தோஸ்ரீ ஹஸ்னா முகமது ஹாஷிம் தலைமையிலான மூவர் கொண்ட நீதிபதிகள் குழு ஏகமனதாகத் தீர்ப்பளித்தது.
ஆகவே, செலவுத் தொகை குறித்த எந்த உத்தரவும் இல்லாமல் பூர்வாங்க ஆட்சேபனை தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
நீதிபதி ஹஸ்னா முகமது ஹஷிமுடன் கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் டத்தோ ஜபரியா முகமட் யூசோப் மற்றும் டத்தோ ஹனிபா ஃபரிகுல்லா ஆகியோர் இந்த வழக்கை செவிமடுத்தனர்.
பின்னர் நீதிபதிகள் குழு மேல்முறையீட்டுக்கு அனுமதிக்கக் கோரும் விண்ணப்பத்தை விசாரிக்கத் தொடங்கியது.
முன்னதாக, நஜிப்பின் வழக்கறிஞர் தாக்கல் செய்த பூர்வாங்க ஆட்சேபனையை கூட்டரசு நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சட்டத்துறைத் தலைவர் டத்தோ முகமட் டுசுகி மொக்தார் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
வழக்கறிஞர் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனையை நாங்கள் எதிர்க்கிறோம். மேல்முறையீடு செய்ய அனுமதி கோரும் எங்கள் விண்ணப்பம் ஒரு இடைக்கால விஷயம் அல்ல என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், மேல்முறையீடு செய்ய அனுமதி கோரிய சட்டத்துறைத் தலைவரின் விண்ணப்பம் தகுதியானது அல்ல என்றும் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் நஜிப்பின் வழக்கறிஞர் டான் ஸ்ரீ முகமது ஷஃபி அப்துல்லா
வாதிட்டார்.
1964ஆம் ஆண்டு நீதித்துறை நீதிமன்றச் சட்டத்தின் 96வது பிரிவின் கீழ் மேல்முறையீடு செய்வதற்கு அனுமதிக்கும் சம்பந்தப்பட்ட சட்டத்தின் தேவையான வரம்பை பூர்த்தி செய்யாததால் இந்த இந்த மனு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆறு ஆண்டு கால சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் கூடுதல் ஆவணம் இருப்பதாகக் கூறும் நஜிப்பின் மனுவை கடந்த ஜனவரி 6 ஆம் தேதி 2-1 என்ற பெரும்பான்மையில் தள்ளுபடி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றம், வழக்கை அதன் தகுதியின் அடிப்படையில் விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு மீண்டும் அனுப்பி வைத்தது.