NATIONAL

இயந்திரத்தில் தீ- ஏர் ஆசியா விமானம் கே.எல்.ஐ.ஏ.2 திரும்பியது

ஷா ஆலம், மார்ச் 27- இயந்திரத்தில் ஏற்பட்ட தீ காரணமாக  சீனாவின் ஷென்சென் நகருக்குப் பயணமான ஏர் ஏசியா ஏ.கே.128 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில்  கோலாலம்பூர் அனைத்துலக  விமான நிலையத்தின் (கே.எல்.ஐ.ஏ.2) 2ஆம் முனையத்திற்கு  திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

விமானம் அவசரமாக தரையிறங்குவது குறித்து தமது துறைக்கு இரவு 10.37 மணிக்கு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து  ஒன்பது பணியாளர்கள் தீயணைப்பு  மீட்பு டெண்டர் வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் மாநில  தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி நடவடிக்கை  இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.

மொத்தம் 171 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் இரவு 9.59 மணிக்கு புறப்பட்ட அந்த    விமானம் தீ அணைக்கப்பட்ட நிலையில் அதிகாலை 12.08 மணிக்கு விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது என்று அவர் தெரிவித்தார்.

அந்த ஏர்பஸ் ஏ320-216 விமானத்தின் நியூமேடிக் டக்டிங் பர்ஸ்ட் சாதனம்  சேதமடைந்தத நிலையில் தரையிறங்குவதற்கு முன்பு விமானத்தில் உள்ள ஹாலோன் அமைப்பால் தீ அணைக்கப்பட்டதாக செயல்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர் என்று அவர் இன்று  அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

பின்னர் தீயணைப்புத் துறையினர் விமானத்திலிருந்து பயணிகள் பாதுகாப்பாக இறங்க  உதவியதுடன்  தீ மீண்டும்  ஏற்படுவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தனர் என்று அகமது முக்லிஸ் கூறினார்.


Pengarang :