ஷா ஆலம், ஜன 27- கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 96 தனியார் மருத்துவமனைகள் இணக்கம் தெரிவித்துள்ளன. இதன் வழி கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கூடுதலாக 1,252 கட்டில்களும் தீவிர சிகிச்சை பிரிவில் 65 கட்டில்களும் 54 வெண்டிலேட்டர் சாதனங்களும் கிடைக்கும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். தனியார் மருத்துவமனைகளுக்கான சிகிச்சை கட்டணத்தை தீர்மானிக்க நிதியமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் காப்புறுதி நிறுவனங்களுக்கிடையே தற்போது பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக அவர் சொன்னார். இதனிடையே, நோய்த் தொற்றைக் கண்டறியும் சோதனைகளை விரிவான அளவில் மேற்கொள்ளவதற்காக அரசு துறைகள் மற்றும் அரசாங்க உயர் கல்விக்கூடங்களில் உள்ள ஆய்வக வசதிகளை அரசாங்கம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார். மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பொருத்தமான அரசாங்க கட்டிடங்கள் கோவிட்-19 நோய் பரிசோதனை செய்யும் மையங்களாக மாற்றப்படவுள்ளதாகவும் அவர் சொன்னார்.