SELANGOR

இரண்டு மாவட்டங்களில் குழாய் நீர் வரத்து ஏறக்குறைய முழுமையடைந்துள்ளது.

ஷா ஆலம், செப் 6 – தூய்மைக்கேடு ஏற்பட்டதைத் தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன் முடக்கப்பட்ட குழாய் நீர் விநியோகம் இன்று காலை 6.30 மணி வரை, உளு சிலாங்கூர் மாவட்டத்தில் 94.12 விழுக்காடும், கோலசிலாங்கூர் மாவட்டத்தில் 91.7 விழுக்காடும் வழக்க நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது.

இதர மாவட்டங்களான பெட்டாலிங் மாவட்டம் 37.17 விழுக்காடும் கிள்ளான் மற்றும் ஷா ஆலம் பகுதிகள் 7.1 விழுக்காடும் கோம்பாக் மாவட்டம் 11.31 விழுக்காடும் குழாய் நீர் வரத்து மேம்பட்டிருப்பதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் தொடர்பு பிரிவுத் தலைவர் எலினா பஸ்ரி கூறினார்.

ஆக, நீர் விநியோகம் பாதிக்கப்பட்ட 1292 இடங்களில் 417 இடங்களுக்கான நீர் விநியோகம் சரி செய்யப்பட்டுவிட்டது. ஞாயிற்றுக் கிழமை காலை 6.30 மணிவரை 37.17 விழுக்காடு சரி
செய்யப்பட்டுள்ளதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்ற இடங்களுக்கான நீர் விநியோகம் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றது.  நீர் விநியோகத்தைப் பெற்றுக்கொண்ட பகுதி வாழ் பயனீட்டாளர்கள் நீர் பயன்பாட்டில் சிக்கனத்தைக் கடைபிடிப்பதின் வழி, பாதிக்கப்பட்ட மற்றப் பகுதிகளும் விரைந்து நீர் விநியோகத்தைப் பெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இன்னும் நீர் விநியோகம் பாதிக்கப்பட்ட பகுதி வாழ் வாடிக்கையாளர்கள் பொது நீர் விநியோகத்தைப் பெறவும், மேற்படியான தகவல்களை பெறவும் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் சகல தொடர்பு முறைகளின் வழியும் தொடர்புகொண்டு விபரமறியலாம் என்கிறது ஆயர் சிலாங்கூர் நிறுவனம்.


Pengarang :