ஷா ஆலம், நவ 26- “பெடுலி சேஹாட்“ திட்டத்திற்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “இல்திசாம் சிலாங்கூர் சேஹாட்“ திட்டத்தின் வாயிலாக 90,000 பேர் சுகாகார பாதுகாப்பை பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தாண்டில் அமலுக்கு வரும் இத்திட்டம் 4 கோடியே 60 லட்சம் வெள்ளி நிதியை உள்ளடக்கியுள்ளது.
அந்த நிதி ஒதுக்கீட்டில் பத்து லட்சம் வெள்ளித் தொகை அரசு ஊழியர்களுக்கான இல்திசாம் சேஹாட் சிலாங்கூர் திட்டத்தின் கிரேட் 44 மற்றும் அதற்கும் கீழ்ப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
தற்போது அமலில் இருந்து வரும் காப்புறுதி திட்டத்தில் 85,000 பேர் பயன் பெற்று வருவதாக கூறிய அவர், கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் படுத்த படுக்கையாக இருப்பவர்களை இலக்காக கொண்டு இந்த எண்ணிக்கை மேலும் 5,000 அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தகுதி பெற்றவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெறுவதை உறுதி செய்யும் வகையில் இதற்கான தகுதி மற்றும் நிபந்தனைகள் மேலும் சீரமைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.