ஷா ஆலம், டிச 21- பத்தாங் காலி முகாம் நிலச்சரிவு சம்பவத்தில் பலியான 25வது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. நேற்று இரவு 11.20 மணியளவில் அச்சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் மாநில நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் உறுதிப்படுத்தினார். இதன் தொடர்பான மேல் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என ஹபிஷாம் முகமட் நூர் தெரிவித்துள்ளார் என பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, ஜாலான் கெந்திங்கில் ஃபாதர்ஸ் ஆர்கானிக் ஃபார்ம் பண்ணைக்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்ததோடு 61 பேர் உயிர் பிழைத்துள்ளனர். மீதமுள்ள எட்டு பேரை இன்னும் காணவில்லை. இந்த பேரிடரில் பாதிக்கப்பட்ட 94 பேரில் 29 பேர் சிறார்கள் என்று பேரிடர் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தை மேற்கோள் காட்டி பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/12/bomba-4.jpg)