NATIONAL

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆடவர் சடலம் சாலையோரம் மீட்பு

கோலாலம்பூர், டிச 31- உள்நாட்டு ஆடவர் என நம்பப்படும் ஒருவரின் சடலம் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெஸ்தாரி ஜெயா-ரவாங் சாலையோரம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

அடையாளம் தெரியாத அந்த நபரின் சடலத்தை ஆடவர் ஒருவர் நேற்று காலை 11.40 மணியளவில் கண்டு ரவாங் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்ததாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜைனால் முகமது முகமது கூறினார்.

தகவல் கிடைத்தவுடன் கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் விசாரணைக் குழு, தடயவியல் பிரிவு மற்றும் கே9 எனப்படும் மோப்ப நாய் பிரிவு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.

சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொலையுண்டவன் 40 வயது மதிக்கத்தக்க உள்நாட்டவர் எனக் கண்டறியப்பட்ட வேளையில் அவரது உடலில் எந்த அடையாள ஆவணமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் சொன்னார்.

அவ்வாடவரின் கை மற்றும் கால்கள் நைலான் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது தலையில் பலத்த காயங்கள் காணப்பட்டன என்று நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

இக்கொலைக்கு காரணம் கண்டறியப்படவில்லை எனக் கூறிய அவர், இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 03-61262222 அல்லது 019-2579232  என்ற எண்களில் ஏ.எஸ்.பி. ஆர்.குழந்தைவேலுவுடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Pengarang :