NATIONAL

ஏரியில் காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு- கெடாவில் சம்பவம்

சிக், ஜன 5- இங்குள்ள தாசேக் குபிர் ஏரியில் கடந்த திங்கள் கிழமை
காணாமல் போன ஆடவர் நேற்று சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.

முகமது அமிருள் அக்மால் ரஷிட் (வயது 29) என்ற அந்த இளைஞரின்
உடல் நேற்று மாலை 4.47 மணியளவில் காணாமல் போன
பகுதியிலிருந்து 50 மீட்டர் தொலைவில் ஆற்றின் நடுவே மிதக்கக்
காணப்பட்டதாக சிக் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன்
அப்துல் ரசாக் ஓஸ்மான் கூறினார்.

மீட்புக் குழுவினர் நேற்று மாலை 6.00 மணியளவில் அச்சடலத்தை மீட்டு
கரைக்குக் கொண்டு வந்ததாகக் கூறிய அவர், சவப் பரிசோதனைக்காக
அவ்வுடல் அலோர் ஸ்டார் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது
என்றார்.

அந்த ஆடவர் கடந்த திங்கள்கிழமை மாலை 5.57 மணியளவில் தாசேக்
குபிர் ஏரியில் மூழ்கியதாகப் போலீசில் புகார் செய்யப்பட்டிருந்தது.

இச்சம்பவம் நிகழ்ந்த போது அமிருளும் அவரின் ஏழு சகாக்களும் அந்த
ஏரிப் பகுதியில் முகாமிட்டு தங்கி வலைவீசி மீன் பிடித்துத்
கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.


Pengarang :