NATIONAL

ஜாக்கெல் நிறுவனத்திற்குப் புதிய வர்த்தக இடம்- ஷா ஆலம் மாநகர் மன்றம் பரிசீலனை

ஷா ஆலம், ஜன 5- வர்த்தகத்தைத் தொடர்வதற்கு ஷா ஆலம் மாநகரில்
புதிய இடத்தை தேடி வரும் ஜாக்கெல் ஜவுளி நிறுவனத்தின்
விண்ணப்பத்தைப் பரிசீலிக்க ஷா ஆலம் மாநகர் மன்றம் தயாராக உள்ளது.

எனினும், இதன் தொடர்பில் அந்த ஜவுளி நிறுவனத்திடமிருந்து தாங்கள்
எந்தவொரு அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தையும் பெறவில்லை என்று
டத்தோ பண்டார் டாக்டர் நோர் ஃபுவாட் அப்துல் ஹமிட் கூறினார்.

நேற்று என்னைச் சந்தித்த ஜாக்கெல் நிறுவன பொறுப்பாளர்கள் ஷா ஆலம்
மருத்துவமனைக்கு அருகில் வியாபாரத்திற்கான இடத்தை தாங்கள் தேடி
வரும் தகவலை தெரிவித்தனர்.

எனினும், இதன் தொடர்பில் நாங்கள் அவர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ
விண்ணப்பத்திற்காகக் காத்திருக்கிறோம் என்று மாநகர் மன்றத்தின் புதிய
உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.

ஷா ஆலம், செக்சன் 7இல் அமைந்துள்ள ஜாக்கெல் ஜவுளியகம் கடந்த
வாரம் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் கடுமையாகச் சேதமடைந்தது.
இந்த சம்பவத்தில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு விற்பனைக்கு
வைக்கப்பட்டிருந்த லட்சக் கணக்கான வெள்ளி மதிப்புள்ள வர்த்தக
பொருள்கள் அழிந்தன.

இதற்கிடையே, இரு தினங்களுக்கு முன்னர் அதே ஜவுளி மையத்தில்
மறுபடியும் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் திரைச்சீலை சேமிப்பு
கிடங்கு கடுமையான சேதங்களுக்குள்ளானது.

இந்த தீவிபத்து காரணமாகத் தங்களின் வர்த்தக நடவடிக்கைகளை முடக்கம்
கண்டுள்ளதாகவும் ஷா ஆலம் வட்டாரத்தில் புதிய வர்த்தக இடத்தைத்
தாங்கள் தேடி வருவதாகவும் ஜாக்கெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்
டத்தோஸ்ரீ முகமது ஃபாரோஸ் முகமது ஜாக்கெல் முன்னதாகக்
கூறியிருந்தார்.


Pengarang :