கோலாலம்பூர், பிப் 24- கல்வியமைச்சின் கீழுள்ள பள்ளிகள் மற்றும் உயர்கல்விக் கூடங்களுக்கு இவ்வாண்டு 50,000 மடிக்கணினிகளை அரசாங்கம் வழங்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மாணவர்களை நாட்டிற்குப் பயனுள்ள பிரஜைகளாக ஆக்குவதில் பங்காற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு இந்த மடிக்கணினிகள் வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
இலக்கவியல் தொழில்நுட்பம் மற்றும் நவீனமயத்திற்க ஆசிரியர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளதாக மக்களவையில் இன்று 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது அவர் குறிப்பிட்டார்.
கல்வியமைச்சுக்கு கடந்தாண்டில் 5,260 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்ட வேளையில் இவ்வாண்டு அத்தொகை 5,520 கோடி வெள்ளியாக அதிகரிக்கப்படுகிறது என்றார் அவர்.