ஈப்போ, பிப் 27- நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த இரு சகோதரிகள் நீரில் மூழ்கி மாண்டனர். இத்துயரச் சம்பவம் ஈப்போவில் நேற்று மாலை நிகழ்ந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 6.10 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யாஹ்யா ஹசான் கூறினார்.
சம்பவ இடத்தில் மேற்கொண்ட விசாணையில் ஈப்போவைச் சேர்ந்த ஒன்பது மற்றும் எட்டு வயதுடைய அவ்விருவரும் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது மூழ்கி மாண்டது தெரியவந்தது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அம்புலன்ஸ் மூலம் ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு அவ்விருவரும் கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதி செய்ததாகவும் அவர் சொன்னார்.
இச்சம்பவம் தொடர்பில் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(ஏ) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
ஆபத்து ஏற்படக்கூடிய நடவடிக்கைகளில் தங்கள் பிள்ளைகள் ஈடுபடாமலிருப்பதை உறுதி செய்யும்படி பெற்றோர்களை அவர் கேட்டுக் கொண்டார்.