பந்திங், மார்ச் 6- சுமார் 36 ஆண்டு காலப் போராட்டத்திற்கு பின் பந்திங் கம்போங் பத்திமா கிராமத்தைச் சேர்ந்த 25 இந்தியக் குடும்பங்கள் நில பட்டாவிற்கான 5ஏ அங்கீகார கடிதத்தைச் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமீருடின் ஷாரியிடமிருந்து நேற்று பெற்றுக் கொண்டனர். இங்கு நேற்று நடைபெற்ற கோல லங்காட் மாவட்ட நிலையிலான கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் மக்களுடன் மாநில அரசு எனும் மக்கள் சந்திப்பில் இந்த நிலபட்டாவிற்கான அங்கீகார கடிதம் வழங்கப்பட்டது. முன்பு சுங்கை மங்கீஸ் பகுதியில் உள்ள அன் கியாட் தோட்டம் மேம்பாடு காணப்பட்ட போது சுங்கை லங்காட் ஆற்றை ஒட்டிய பகுதியில் 2-5 ஏக்கர் நிலத்தில் 37 முன்னால் தோட்டத் தொழிலாளர்கள் தனி தனி தற்காலிக லாட் நிலத்தில் வீடுகளைக் கட்டி குடியேறியதுடன் 1987 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரை தற்காலிக நில வரியைக் கட்டி வந்ததாக அந்த கிராமத்து தலைவர் மா.குணசேகரன் கூறினார். அதன் பிறகு நில பட்டா விண்ணப்பம் வேண்டி தொடர் போராட்டம் நடத்தியதன் பயனாக இன்று 25 பேருக்கு நில அங்கீகார கடிதம் கிடைக்கப் பெற்றதுடன் கிடைக்காத மீதமுள்ள 12 பேருக்கு மனு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிலா பட்டா அங்கீகார கடிதம் கிடைக்க உறுதுணையாக இருந்த மாநில மந்திரி புசார், கோலலங்காட் தொகுதி தலைவர் ஹரிதாஸ் ராமசாமி, தெலுக் டத்தோ சட்ட மன்ற உறுப்பினர், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் அனைவருக்கும் கம்போங் பாத்திமா கிராமத்து சார்பாக தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக மா.குணசேகரன் கூறினார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2023/03/unnamed-28.jpg)