செலாயாங், மார்ச் 7- சிலாங்கூர் அரசின் அத்தியாவசிய உணவுப் பொருள் மலிவு விற்பனையில் கடந்த மாதம் பங்கேற்கத் தொடங்கியது முதல் தமது வியாபாரம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெறுவது குறித்து பாவ் உணவு வியாபாரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்த ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டத்தின் வாயிலாக தினசரி 700 முதல் 1,000 பாவ் வரை தாம் விற்பனை செய்வதாக அனுவார் ஜைடின முகமது கூறினார். வேகவைக்கப்பட்டு உறை நிலையில் பொட்டலமிடப்பட்டு தலா ஒரு வெள்ளி விலையில் விற்கப்படும் இந்த உணவுப் பொருளுக்கு மாநில அரசின் மலிவு விற்பனையில் அமோக வரவேற்பு இருந்து வருவதாக அவர் சொன்னார்.
இந்த உணவுப் பொருளை நான் என் மனைவியுடன் உதவியுடன் சொந்தமாகவே செய்கிறேன். இந்த மலிவு விற்பனையில் இந்த உணவு வகைக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது என்றார் அவர்.
இந்த மலிவு விற்பனையில் தனது ஃபூட் டிராக் எனப்படும் உணவு வண்டியை நிறுத்தி வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கியத் தரப்பினருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள பத்து கேவ்ஸ் பொது மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையின் போது சிலாங்கூர்கினியிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாகக் கடந்த ஈராண்டுகளாக எனது வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு கடன் தொகையும் அதிகரித்து விட்டது. இப்போது அந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டு பாவ் அடேக் எனும் பெயரில் வியாபாரத்தைச் சுறுசுறுப்புடன் மேற்கொண்டு வருகிறேன் என்று அனுவார் சொன்னார்.