கிள்ளான், மார்ச் 14- கடுமையான வெள்ளம் காரணமாப் பெரிதும் பாதிக்கப்பட்ட ஜொகூர் மாநிலத்தின் ச்சா வட்டார மக்களுக்குச் செந்தோசா சட்டமன்றத் தொகுதி பல்வேறு உதவிப் பொருள்களை வழங்கியது.
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை ச்சா நகருக்குப் பயணம் மேற்கொண்ட சொந்தோசா தன்னார்வலர் குழுவினர் தாமான் ச்சா குடியிருப்பு பகுதியிலுள்ள மூவினங்களையும் சேர்ந்த 371 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் வீடுகளைத் துப்புரவு செய்யும் உபகரணங்களை விநியோகித்தனர்.
தாமான் செந்தோசா குடியிருப்பாளர் சங்கங்கள் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்புடன் இந்த வெள்ள நிவாரண உதவித் திட்டம் மேற்கொள்ளப்பட்டதாகத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் கூறினார்.
மூன்று டன் லோரி மற்றும் எட்டு நான்கு சக்கர இயக்க வாகனங்களில் 20 பேர் கொண்ட குழுவினர் கடந்த வெள்ளியன்று ச்சா நகருக்கு பயணம் மேற்கொண்டோம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொருள்களை விநியோகிக்கும் பணியில் ச்சா டத்தோ ரவிசங்கர், பாகோ சுப்ரா போன்ற வட்டார பிரமுகர்களும் உதவி நல்கினர் என்றார் அவர்.
இந்த பயணத்தின் போது தலா 100 வெள்ளி மதிப்புள்ள அரிசின், சீனி, மைலோ, பால்மாவு, மேகிமீ உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய உணவுப் பொட்டலங்கள், போர்வை, தலையணை ஆகியவற்றோடு வாளி, துடைப்பம் போன்ற வீடுகளைத் துப்புரவு செய்யும் உபகரணங்களும் வழங்கப்பட்டன என அவர் மேலும் தெரிவித்தார்.