NATIONAL

ஜொகூரில் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது

ஜொகூர் பாரு, மார்ச் 19: ஜொகூரில் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி வெள்ள நிலைமை தொடர்ந்து நல்ல முன்னேற்றத்தைக் காட்டுகிறது. தற்காலிக தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

நேற்று பிற்பகல் 4 மணி நிலவரப்படி 77 தற்காலிகத் தங்கும் மையங்களில் 20,107 பேர் இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 19,041 பேராகக் குறைந்துள்ளது எனத் தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழு (ஜேபிபிஎன்) தெரிவித்துள்ளது.

“பத்து பஹாட்டில் உள்ள இரண்டு தற்காலிகத் தங்கும் மையங்கள் மூடப்பட்டன” என்று ஜேபிபிஎன் நேற்று இரவு ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து பஹாட்டில் இன்னும் அதிகமாக உள்ளது அதாவது 5,423 குடும்பங்களைச் சேர்ந்த 19,039 பேராக உள்ளது. அதைத் தொடர்ந்து செகமாட்டில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜேபிபிஎன் தெரிவித்தது.

– பெர்னாமா


Pengarang :