ஜாகர்த்தா, மார்ச் 20- நாட்டில் முட்டை விநியோகத் தட்டுப்பாடு பிரச்சினைக்கு இவ்வாண்டு இறுதிக்குள் தீர்வு காணப்படும் என விவசாய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு நம்பிக்கை கொண்டுள்ளது. விவசாயத் துறைகளுக்கு அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்கும் பணியை எளிதாக்குவது உள்பட அரசின் உதவியுடன் கடந்த ஜனவரி முதல் அமைச்சு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக இம்முயற்சி சாத்தியப்படும் என்று அதன் அதன் அமைச்சர் முகமது சாபு கூறினார். ஆண்டு இறுதிக்குள் முட்டை விநியோகம் முழுமையாக சீரடையும் என்பதோடு ஏற்றுமதி செய்வதற்குரிய நிலையையும் எட்டும் என்று அவர் தெரிவித்தார். நேற்று இங்கு இந்தோனேசியாவில் வசிக்கும் மலேசியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். இருந்த போதிலும், முட்டை ஏற்றுமதிக்கு பாதகத்தை ஏற்படுத்தக்கூடிய பருவநிலை மாற்றும் நோய்கள் தொடர்பான பிரச்சினைகள் மீதும் கவனம் செலுத்தப்படுகிறது என்று அவர் சொன்னார். வெளிநாட்டிலிருந்து முட்டை இறக்குமதி செய்வதற்கு அமைச்சு கடந்த டிசம்பர் 16ஆம் தேதி அனுமதி வழங்கியது. நாட்டில் முட்டை விநியோகம் நிலைப் பெற்றவுடன் இந்நடவடிக்கையை மறு ஆய்வு செய்வது என முடிவெடுக்கப்பட்டது.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/10/FW1151681_KL64_21032021_TELUR-lpr-960x641.jpg)