NATIONAL

மருத்துவர் ஒருவர் சந்தேக நபரால் தாக்கப்பட்டார்

கோலாலம்பூர், மார்ச் 21 – அம்பாங்கில் நேற்று நடந்த சாலை விபத்தில் மருத்துவரை காயப்படுத்தி மிரட்டியதாக உள்ளூர் நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜாலான் கோலம் ஆயர் லாமா போக்குவரத்து விளக்கு சந்திப்பில் நேற்று காலை 10.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், சந்தேக நபர் பயணித்த வெள்ளை நிற மெர்சிடிஸ் பென்ஸ் கார் 67 வயதான மருத்துவர் ஒருவரின் காரை மோதியதாக அம்பாங் ஜெயா மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஃபரூக் இஷாக் தெரிவித்தார்.

“அருகிலுள்ள ஒரு எரிவாயு நிலையத்திற்கு முன்னால் வந்த போது, சந்தேக நபர் தனது காரை மருத்துவரின் காரின் முன் நிறுத்தி அக் காரின் கதவை திறக்க சென்றுள்ளார்.

“பின் அந்த சந்தேக நபர் மருத்துவரின் வலது கன்னத்தில் குத்தியுள்ளார், மேலும் பாதிக்கப்பட்டவரின் தலைமுடியை இழுத்து உதைத்தார்.

இந்த சம்பவத்தைச் சாலை பயன்பாட்டாளர்கள் பதிவு செய்துள்ளனர், மேலும் இந்த சம்பவத்தின் பதிவு நேற்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது, ”என்று ஏசிபி இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

27 வயதான அந்த சந்தேக நபர் நேற்று இரவு 9.45 மணியளவில் அம்பாங் ஜெயா மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் கைது செய்யப்பட்டதாக முகமட் ஃபரூக் கூறினார்.

சந்தேக நபருக்கு இதற்கு முன் குற்றவியல் பதிவு இல்லை மற்றும் அவர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

– பெர்னாமா


Pengarang :