NATIONAL

உணவு மூலப் பொருள்களை நேரடியாக இறக்குமதி செய்ய அனுமதிப்பீர்- இந்திய உணவக உரிமையாளர்கள் கோரிக்கை

பெட்டாலிங் ஜெயா, ஏப் 11- உணவுப் பொருள் விலையைக் குறைப்பதற்கு
ஏதுவாக உணவு மூலப்பொருள்களை நேரடியாக இறக்குமதி
செய்வதற்கான அனுமதியை வழங்கும்படி இந்திய உணவகங்களைப்
பிரதிநிதிக்கும் தரப்பினர் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோழி, முட்டை போன்ற உணவு மூலப் பொருள்களின் விலை உயர்வு
கண்டுள்ள காரணத்தால் 5.00 வெள்ளி விலையில் உணவை விற்கும்
மெனு ரஹ்மா திட்டத்தில் இணைந்துள்ள தங்களுக்கு பெரும் இழப்பு
ஏற்பட்டுள்ளதாக பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக
உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஜே.சுரேஷ் கூறினார்.

உணவு விலை அதிகமாக உள்ளதாக பொது மக்கள் குறை கூறுகின்றனர்.
இந்த விஷயத்தில் எங்களைக் (உணவக உரிமையாளர்கள்) குறை கூறி
பயனில்லை என்று ஃபிரி மலேசியா டுடே இணைய ஏட்டுக்கு அளித்த
பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு தரப்பினரிடமிருந்து கைமாறி வரும் உணவு மூலப்
பொருள்களுக்காக நாங்கள் அதிகம் செலவிட வேண்டியுள்ளது. அவற்றை
நாங்கள் ஏன் நேரடியாக இறக்குமதி செய்யக் கூடாது என அவர்
கேள்வியெழுப்பினார்.

இவ்வாறு செய்வதன் உணவு மூலப் பொருள்களை மேனு ரஹ்மா
திட்டத்தில் பங்கு கொண்டுள்ள உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ள முடியும்.
இதன் வழி உணவின் விலையையும் குறைக்க இயலும் என்றார் அவர்.

இதனிடையே, கட்டுபடி விலையிலான உணவு விற்பனைத் திட்டத்தில்
பங்கேற்றுள்ள உணவகங்களுக்கு ஊக்குவிப்பை வழங்கும் வகையில்
மானிய விலை சமையல் எண்ணெயை பயன்படுத்துவதற்கான
அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என பிரெஸ்மா எனப்படும்

மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஜவஹார்
அலி தாய்ப் ஆலோசனை கூறினார்.


Pengarang :