NATIONAL

காராக் நெடுஞ்சாலையில் விபத்து- லோரி உதவியாளர் சுகுமாறன் மரணம்

பெந்தோங், ஏப் 11- கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் புக்கிட் திங்கி
அருகே லோரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான
சம்பவத்தில் அதன் உதவியாளர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.

இன்று விடியற்காலை நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஆர்.சுகுமாறன் என்ற
லோரி உதவியாளர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட வேளையில் 41
வயதான அதன் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது.

இந்த விபத்து தொடர்பில் அதிகாலை 3.31 மணியளவில் தாங்கள்
தகவலைப் பெற்றதாக பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்
துறையின் பொது உறவு அதிகாரி ஜூல்பாட்லி ஜக்காரியா கூறினார்.

பெந்தோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து எழுவர் கொண்ட
தீயணைப்புக் குழுவினரும் ஜண்டா பாய்க் தன்னார்வலர் தீயணைப்புக்
குழுவை சேர்ந்த ஐவரும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர்
சொன்னார்.

சம்பவ இடத்தை அடைந்த போது கட்டுப்பாட்டை இழந்து
விபத்துக்குள்ளான அந்த லோரியின் இடிபாடுகளுக்கிடையே இருவர்
சிக்கிக் கொண்டிருப்பதை தாங்கள் கண்டதாக அவர் தெரிவித்தார்.

லோரியில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை விஷேச கருவிகள் மூலம் மீட்டு
சுகாதார அமைச்சின் பணியாளர்களிடம் ஒப்படைத்ததாக அவர் மேலும்
குறிப்பிட்டார்.


Pengarang :