ANTARABANGSA

மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க மாமன்னர் தம்பதியர் லண்டன் பயணம்

புத்ராஜெயா, மே 3- மேன்மை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா
ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி
அகோங் தெங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா தம்பதியர்
இன்று தொடங்கி வரும் 14ஆம் தேதி வரை இங்கிலாந்துக்கு அதிகாரப்பூர்வ
வருகை மேற்கொள்கின்றனர்.

இம்மாதம் 6ஆம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறவிருக்கும்
தனது முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ளும்படி மூன்றாம் மன்னர்
சார்ல்ஸ் விடுத்த சிறப்பு அழைப்பின் பேரில் மாமன்னர் தம்பதியர் இந்தப்
பயணத்தை மேற்கொள்வதாக வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா)
கூறியது.

எதிர்வரும் மே 5ஆம் தேதி பக்கிம்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்ல்ஸ்
வழங்கும் விருந்து நிகழ்விலும் மாமன்னர் தம்பதியர் கலந்து கொள்வர்
என்று அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

மலேசியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நீடித்த உறவை
வலுப்படுத்துவதில் குறிப்பாகக் காமன்வெல்த் ஒத்துழைப்பு மற்றும் இரு
நாட்டு அரச உறவின் மேம்பாட்டில் இந்த பயணம் குறிப்பிடத்தக்க
பங்கினை ஆற்றும் எனவும் அவ்வறிக்கை குறிப்பிட்டது.


Pengarang :