NATIONAL

பெட்டாலிங் ஜெயா ஊழியர் சேமநிதி  கட்டிடத்தில் தீ 

கோலாலம்பூர், மே 22: ஜாலான் காசிங், பெட்டாலிங் ஜெயா வில் உள்ள ஊழியர்  சேம நிதி  (இபிஎஃப்) பழைய கட்டிடம் தீப்பிடித்தது. 2018 ஆம் ஆண்டும் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக தனது துறைக்கு இன்று காலை 10.39 மணி அளவில் அவசர அழைப்பு வந்ததாகவும் உடனே ஆறு நிமிடங்களுக்குள் சம்பவ இடத்தை சென்று அடைந்ததாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவியாளர் ஹபிஷாம் முகமட் நூர் கூறினார்.

செக்‌ஷன் 7, செர்டாங் , பூச்சோங், ஹாங் துவா மற்றும் பந்தாய் டாலாம் ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

“இக்கட்டிடத்தின் 4 மற்றும் 5வது தளங்கள் மட்டுமே இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டன. இன்று காலை 11.08 மணி அளவில் தீயைக் கட்டுப்படுத்த முடிந்தது என்று அவர் தெரிவித்தார்.

“இச்சம்பவத்தால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேலும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது,” என்று அவர் இன்று சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

 – பெர்னாமா


Pengarang :