NATIONAL

கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் மூதாட்டியின் சடலம் வீட்டின் அறையில் கண்டுபிடிப்பு

ஈப்போ, மே 25- மூதாட்டி ஒருவர் அரை நிர்வாணக் கோலத்தில் வீட்டின் படுக்கை அறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். இச்சம்பவம் சிம்பாங் லீமா, கம்போங் தெர்சுசுனில் நேற்று நிகழ்ந்தது.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அந்த மூதாட்டியின் வீட்டிற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தியதாகப் பேராக் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசான் பாஸ்ரி கூறினார்.

தனியாக தங்கியிருந்ததாக கூறப்படும் அந்த மூதாட்டி அவ்வீட்டில் சடலமாக காணப்பட்ட வேளையில் தலையணை, மெத்தை மற்றும் அறையின் சுற்றில் இரத்தக் கறைகள் காணப்பட்டன என்று அவர்  சொன்னார்.

அந்த 61வயது மூதாட்டியின் காது, கழுத்து, உதடு ஆகிய பகுதிகளில் காயங்களும் கையில் வீக்கமும் காணப்பட்டதாகக் கூறிய அவர், குற்றவாளியிடம் இருந்து தப்பும் நோக்கில் அம்மாது மல்லு கட்டியதால் அக்காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது என்றார்.

குற்றவாளி சன்னல் வழியாக வீட்டில் நுழைந்ததற்கு அடையாளமாக சன்னல் ஒன்று நெம்பித் திறக்கப்பட்டு மூன்று கண்ணாடிகளும் அகற்ற பட்டிருந்தன. எனினும், வீட்டிலிருந்து பொருட்கள் எதுவும் களவாட படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின்  கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றவாளியைத் தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Pengarang :