NATIONAL

இளைஞர்கள் வாசிப்பு கலாச்சாரத்தைத் தொடர்ந்து வளர்க்க-  பிரதமர் வலியுறுத்து

லங்காவி, மே 25: நாட்டின் தலைமைப் பதவிக்கு வாரிசாக இருக்கும் இளம் தலைமுறையினர் தங்களுக்கும் சமூகத்திற்கும் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு கொள்கைகள் மற்றும் இலட்சியங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விரும்புகிறார்.

இந்த நாட்டில் எந்த வகையான கொடுங்கோன்மை மற்றும் அடக்குமுறையை நிராகரிக்கும் அதே வேளையில் இளைஞர்களுக்கு உண்மை மற்றும் நீதியின் பொருளைக் கண்டறிய இலட்சியவாதம் உதவும் என்று அவர் கூறினார்.

“இப்போது நான் பொறுப்பு பெற்றுள்ளதால், இளைஞர்கள் சிந்திக்கவும், அறிவை வளர்க்கவும், பிரச்சினைகளை நன்கு சீர்தூக்கி பார்த்தல், தீமை, கொடுங்கோன்மை, அடக்குமுறை மற்றும் மோசடி எது என்பதை அறிய கூடிய விவேக தலைமுறையாக அவர்களை மாற்ற விரும்புகிறேன். லங்காவி தொழிற்கல்லூரியில் பிரதமருடனான உரையாடல் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.

எந்தவொரு பிரச்னையிலும் சிறந்த தீர்ப்புகள் வழங்கவும், நீதியை நிலைநாட்டவும் அறிவு திறன் உதவும் என்பதால், வாசிப்பு கலாச்சாரத்தைக் கைவிட வேண்டாம் என்றும் அன்வார் இளைஞர்களுக்கு நினைவூட்டினார்.

சமூக ஊடகங்களை அதிகம் விரும்பும் இன்றைய இளைஞர்களின் அணுகுமுறையை பற்றி கேட்டதற்கு அதை நல்ல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

இ-துனாய் பெலியா ரஹ்மா (இளைஞர் மின் பண உதவி) உதவி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த ஜூன் மாதம் தொடங்கி அது விநியோகிக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.

இ-துனாய் பெலியா என்னும் (மின்-பண) ரஹ்மா RM200 திட்டம், 18 முதல் 20 வயதுடைய இளைஞர்களுக்கு உதவுவதற்காக RM400 மில்லியன் ஒதுக்கீட்டில்  2023 பட்ஜெட்டில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.

– பெர்னாமா


Pengarang :