உலு லங்காட், மே 25- தேர்ந்தெடுக்கப்பட்ட 20 சமூக நல இல்லங்கள் பராமரிப்பு செலவுகளை ஈடுகட்டுவதற்காக மாநில அரசு மொத்தம் 100,000 வெள்ளியை மானியமாக ஒதுக்கியுள்ளது.
சிலாங்கூர் மாநில அரசின் 2023 சாந்துனி சமூக நலத் திட்டத்தின் மூலம் இந்த மானியம் அளிக்கப்படுவதாக சமூக நலத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு சமூக நல மையத்திற்கும் தலா 5,000 வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படும். இன்றைய நிகழ்வில் இத்திட்டத்தின் மூலம் 20 சமூக நல மையங்களுக்கு மொத்தம் 100,000 வழங்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
இத்தகைய பராமரிப்பு மையங்களின் நிர்வாகச் செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதை மாநில அரசு உணர்ந்து சமூக நல நிலைக்குழு மூலம் இந்த திட்டத்தை அமல் படுத்தியுள்ளது.
இந்த உதவியானது பராமரிப்பு மையங்களின் தேவைகளை ஓரளவிற்கு ஈடுசெய்யும் என்று நம்புகிறேன் என்றார் அவர். முன்னதாக, அவர் இங்குள்ள மஹ்முதா பராமரிப்பு மையத்தில் சமூக நல நிலைக்குழுவின் நிதியுதவி வழங்கினார்.
சிலாங்கூர் மாநில சமூக நல சாந்துனி திட்டம் 2023 இன் கீழ் மலேசிய இளைஞர் அமைப்பின் ஒத்துழைப்பின் மூலம் மொத்தம் 100,000 வெள்ளி 20 சமூக நல அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்க பட்டன.
சமூக நல இல்லங்களுக்கு இதுபோன்ற உதவிகள் வழங்கும் திட்டத்தை மாநில அரசு தொடர்ந்து நடத்தும் என நம்புவதாகக் கணபதிராவ் மேலும் கூறினார்.