போர்ட்டிக்சன், மே 30 - இங்குள்ள லுக்குட், கம்போங் ஸ்ரீ பாரிட் என்ற இடத்தில் நாய் இறப்பதற்குக் காரணமாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் முதியவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மிகவும் கொடூரமான முறையில் சித்தரவதை செய்யப்பட்டதால் அந்த நாயின் உடம்பில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டது தொடர்பில் 44 வயதுடைய நபரிடமிருந்து காவல்துறைக்குப் புகார் கிடைத்ததாகப் போர்ட்டிக்சன் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் அய்டி ஷாம் முகமது கூறினார். அந்த நாய் ஒரு காரில் கட்டி இழுத்துச் செல்லப்படுவதை புகார்தாரர் பார்த்துள்ளார். இந்த கொடூரச் செயல் அந்த நாயின் மரணத்திற்கு வழிவகுத்தது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார். 61 வயதான நாய் உரிமையாளர் நேற்று இரவு 10.05 மணியளவில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக ஒரு நாள் வைக்கப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2023/04/polis-grafik.jpg)