கோலாலம்பூர், மே 31: 2023 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி (SIBF), எதிர்வரும் டிசம்பர் 1 முதல் 10 வரை வெளிநாட்டு பதிப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் பங்கேற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதோடு, இந்தத் தொழிலை உயர்மட்ட அளவில் கொண்டு செல்வதற்கான வாய்ப்பை இந்த நிகழ்வு சிலாங்கூருக்கு வழங்கியுள்ளதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.
நேற்று கோலாலம்பூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி 2023 இல் கலந்து கொண்டு அவர் இவ்வாறு கூறினார்.
16 ஆண்டுகளாக ஏற்பாடு செய்யப்பட்ட சிலாங்கூர் புத்தகக் கண்காட்சியின் தொடர்ச்சியாகக் கடந்த ஆண்டு முதல் இது ‘’ சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி’’ (SIBF) முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த புத்தகக் கண்காட்சியில் யூனைடட் கிங்டம், துருக்கி, வட மாசிடோனியா, தென் கொரியா மற்றும் எகிப்து உட்பட 225 உள்ளூர் மற்றும் சர்வதேச வருகையாளர்கள் கலந்து கொண்டனர்.
11 நாட்கள் நடக்க ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் 200,000க்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை புரிந்தனர். அதுமட்டுமில்லாமல், மொத்த விற்பனையின் மதிப்பு RM5 மில்லியனுக்கும் அதிகமாகும்.