NATIONAL

இரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீயில் இருவர் காயம்

கோலாலம்பூர், ஜூன் 1- இங்குள்ள தாமான் டெக்னோலோஜி பார்க்
தொழில்பேட்டையிலுள்ள ஒரு இரசாயனக் கிடங்கில் நேற்று ஏற்பட்ட
தீவிபத்தில் இரு ஊழியர்கள் கடுமையான தீக்காயங்களுக்குள்ளாயினர்.

இந்த விபத்தில் 20 மற்றும் 25 வயதுடைய அவ்விரு தொழிலாளர்களுக்கும்
50 விழுக்காடு தீக்காயங்கள் ஏற்பட்டதாகக் கோலாலாம்பூர் தீயணைப்பு
மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு தொடர்
சிகிச்சைக்காக பண்டார் துன் ரசாக் தேசியப் பல்கலைக்கழக வேந்தர்
துவாங்கு முகரிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அவர்
தெரிவித்தார்.

இந்த தீ விபத்து தொடர்பில் நேற்று மாலை 4.35 மணியளவில் தகவல்
கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து புக்கிட் ஜாலில் தீயணைப்பு
நிலையத்தைச் சேர்ந்த ஹஸ்மாட் எனப்படும் அபாயகர பொருள்களைக்
கையாளும் குழுவினர் உள்பட 14 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக
அவர் சொன்னார்.

பத்து நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்த அவர்கள் அந்த கிடங்கில்
தீ கொளுந்து விட்டுடெரிவதையும் அவ்விபத்தில் இரு ஊழியர்கள்
தீக்காயங்களுக்குள்ளானதையும் கண்டனர் என்று அவர் பெர்னாமாவுக்கு
அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

சுமார் 800 சதுர அடி கொண்ட அந்த பகுதியில் ஏற்பட்ட தீ மாலை 5.15
மணியளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறிய அவர்,
தீக்கான காரணம் இன்னும் ஆராயப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :