NATIONAL

நான்கு மாதக் கர்ப்பிணி காதலியைக் கொன்று எரித்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்

ஷா ஆலம், ஜூன் 1: கடந்த வாரம் சுங்கை பெசார், கம்போங் சுங்கை லிமாவ்வில் உள்ள செம்பனை தோட்டத்தில் தனது நான்கு மாதக் கர்ப்பிணி காதலியைக் கொன்று எரித்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் இன்று காலை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

முன்னாள் கல்லூரி மாணவரான அந்நபர் மீது சுங்கை பெசார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று சபாக் பெர்ணம் மாவட்டக் காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் அகுஸ் சலீம் முகமது அலியாஸ் தெரிவித்தார்.

அப்பெண்ணின் மரணத்திற்கு மார்பில் குத்திய காயமே காரணம் என்று ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டன.

20 வயதுடைய அச் சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரின் தலையில் பலமாக அடித்துள்ளதாக மே 24 அன்று, சபாக் பெர்ணம் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அகுஸ் சலீம் கூறினார்.

  சம்பவத்தன்று இரவு சந்தேக நபர் தனது காதலியின் உடலை எரிப்பதற்கு முன் அப்பெண்ணைச் சமையலறைக் கத்தியால் குத்திவிட்டு, வயிற்றை வெட்டியுள்ளார். பின் மறுநாள் பெட்ரோல் நிரப்பிய பீப்பாய்டன் சம்பவ இடத்துக்குத் திரும்பி வந்து உடலை மறுபடியும் எரிந்துள்ளார்.

– பெர்னாமா


Pengarang :