NATIONAL

எல்.டி.பி.2 நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் கணவன்-மனைவி மரணம்

கோல பெராங், ஜூன் 19- நான்கு இயக்க சக்கர வாகனம் மற்றும் டிரெய்லர்
லோரி சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழந்தனர்.
இவ்விபத்து கிழக்கு கரை நெடுஞ்சாலை 2இன் (எல்.பி.டி.2) 392.9வது கிலோ
மீட்டரில் புக்கிட் பீசி-அஜில் இடையே நேற்றிரவு நிகழ்ந்தது.

இரவு மணி 9.00 அளவில் நிகழ்ந்த அவ்விபத்தில் அந்த நான்கு சக்கர
இயக்க வாகனத்தில் பயணம் செய்த முகமது கனி (வயது 68) மற்றும்
மினா அப்துல்லா (வயது 69) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்ததாக உலு திரங்கானு மாவட்டப் போலீஸ் தலைவர் டி.எஸ்.பி.
ஹஸ்மிரா ஹசான் கூறினார்.

இச்சம்பவத்தின் போது அந்த வாகனத்தை ஓட்டிய அத்தம்பதியரின்
மகனுக்கு இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதாக அவர்
தெரிவித்தார்.

இந்த விபத்து நிகழ்ந்த போது அந்த நான்கு சக்கர இயக்க வாகனம்
குவாந்தானிலிருந்து கோல திரங்கானு நோக்கிச் சென்று கொண்டிருந்த
வேளையில் டிரெய்லர் லோரி குவாந்தானிலிருந்து கோத்தா பாரு நோக்கி
சென்று கொண்டிருந்தது தொடக்கக் கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது என்று அவர் சொன்னார்.

சம்பவ இடத்தை அடைந்த போது அந்த நான்கு சக்கர இயக்க வாகனம்
நெடுஞ்சாலையின் இடது தடத்தில் சென்று கொண்டிருந்த டிரெய்லர்
லோரியின் பின்புறம் மோதியது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த விபத்தில் அந்த நான்கு சக்கர இயக்க வாகனத்தின் முன்பகுதி
மோசமாக சேதமடைந்த நிலையில் டிரெய்லர் லோரியின் வலது பக்க டயர்
வெடித்தது. லோரியின் ஓட்டுநரும் உதவியாளரும் இச்சம்பவத்தில்
காயமின்றி உயிர்த்தப்பினர் என்றார் அவர்.


Pengarang :