NATIONAL

சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான ஒப்புதலைப் பெற ஆட்சியாளரைச் சந்திக்கிறார் நெகிரி மந்திரி புசார்

சிரம்பான், ஜூன் 21- மாநிலத்
தேர்தலுக்கு வழி விடும் வகையில்
நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக்
கலைப்பது தொடர்பான ஒப்புதலைப்
பெறுவதற்காக அம்மாநில மந்திரி புசார் அமிருடன் ஹருண்,
மாநில யாங்டி பெர்த்துவான் பெசார்
துவாங்கு முரிஸ் இப்னி
அல்மார்ஹூம் துவாங்கு முனாவிரை
இம்மாதம் 28ஆம் தேதி சந்திக்க
உள்ளார்.

மாநில ஆட்சியாளரின் ஒப்புதல்
கிடைக்கும் பட்சத்தில் ஜூன் 30ஆம்
தேதி மாநிலச் சட்டமன்றம்
கலைக்கப்படும். அதுவே இந்த
தவணைக்கான இறுதி நாளாகவும்
அமையும் என்று அமிருடின்
தெரிவித்தார்.

ஜூன் மாதம் 30 ஆம் தேதி மாநில
சட்டமன்றம் கலைக்கப்படும் என்று சிக்காமாட்
தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான
அமிருடின் முன்னதாக கூறியிருந்தார்.

மாநிலத் தேர்தலுக்கு வழிவிடும்
வகையில் சிலாங்கூர், நெகிரி
செம்பிலான், பினாங்கு, கெடா,
கிளந்தான், திரங்கானு ஆகிய 6
மாநிலங்களில் சட்டமன்றங்கள்
விரைவில் கலைக்கப்படவுள்ளன.

கடந்த பதினான்காவது பொதுத்
தேர்தலில் இம்மாநிலத்தில்
பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி 20 தொகுதிகளையும் பாரிசான்
நேஷனல் கூட்டணி 16 தொகுதிகளையும் வென்றன.


Pengarang :