ஷா ஆலம், ஜூன் 21: பண்டார் சௌஜனா புத்ரா பகுதியில் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் இந்த டிசம்பரில் நிறைவடையும் வேளையில், தற்காலிக போக்குவரத்து மாற்றுப் பாதை அமைப்பது குறித்து பரிசீலிக்க படலாம்.
பண்டார் சௌஜானா புத்ராவில் போக்குவரத்து நெரிசலைக் சமாளிக்க மேம்பாலம் கட்டும் பணியின் முன்னேற்றத்தைத் தனது தரப்பு தொடர்ந்து கண்காணித்து வருவதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
“கட்டுமானத்தின் முன்னேற்றம் குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் அறிக்கை அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும், ஏனெனில் நேற்று இரவு, அவர் அவ்வழியே செல்லும் போது, அங்கு வேலை எதுவும் நடைபெறவில்லை என்பதால், அதற்கான காரணத்தை கண்டறிய இந்த விவரம் கோரப்பட்டதாக கூறினார்.
மேம்பாட்டுத் திட்டம் நடைபெறும்போது போக்குவரத்தை எவ்வாறு திசை திருப்புவது என்பதற்கான தீர்வைக் கண்டறிவது அவசியம்” என்றார் அவர்
இதற்கிடையில், மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் பெரியளவில் சேதமடைந்த சாலைகளை சரி செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமிருடின் கூறினார்.
“இன்ஃப்ராசெல்லின் ட்விட்டரில், பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலம் பொதுமக்கள் சாலை சேதங்கள் குறித்து புகாரளிக்கலாம்,” என்று அவர் கூறினார்.
பண்டார் சௌஜனா புத்ராவில் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க மேம்பாலம் கட்டும் பணி இந்த ஆண்டு டிசம்பரில் முழுமை பெறும். அது RM65 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்படுவதாக உள்கட்டமைப்பு எஸ்கோ இஷாம் அசிம் கூறினார்.
ஜூன் 1 ஆம் தேதி தொடங்கிய ஒன்பது மாவட்டங்களில் 94.9 கிலோமீட்டர் தூரத்திற்கு பெரியளவில் சாலைகளைச் செப்பனிடும் பணிகள் ஜூலை இறுதிக்குள் முழுமையாக முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதற்காக RM50 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.