NATIONAL

கூலிமில் நிகழ்ந்த இரு சம்பவங்களில் இருவர் நீரில் மூழ்கி மரணம்

அலோர்ஸ்டார் ஜூலை 4- கூலிமில் உள்ள இரு பொழுதுபோக்கு
மையங்களில் குளித்துக் கொண்டிருந்த 18 வயது இளைஞர் உள்ளிட்ட
இருவர் நீரில் மூழ்கி மரணமடைந்தனர்.

நேற்று நண்பகல் 12.00 மணியளவில் இங்குள்ள லாத்தா அருஸ் டெராஸ்
லுபோக் பூலோ சுற்றுலா மையத்தில் தன் மூன்று நண்பர்களுடன்
குளித்துக் கொண்டிருந்த போது அந்த இளைஞர் நீரில் மூழ்கியதாகக் கூலிம்
மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது ரிட்சுவான் சாலே
கூறினார்.

ஆற்றின் அடியில் மூழ்கிய அந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் மீட்டு
கரைக்கு கொண்டு வந்தனர். எனினும் அவர் இறந்து விட்டது பின்னர்
உறுதி செய்யப்பட்டது என்று நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை
ஒன்றில் அவர் தெரிவித்தார்.

ஜூன்ஜோங், ஆயர் பூத்தே உல்லாசத் தலத்தில் நிகழ்ந்த மற்றொரு
சம்பவத்தில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் மூழ்கி இறந்தார் என அவர்
சொன்னார்.

நேற்று பிற்பகல் 2.10 மணியளவில் நண்பர்களுடன் அங்கு குளித்துக்
கொண்டிருந்த திடீரென நீரில் மூழ்கியதாகவும் அவரை மீட்க நண்பர்கள்
மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் அவர் மேலும்
தெரிவித்தார்.

அவ்விருவரின் உடல்களும் பரிசோதனைக்காகக் கூலிம் மருத்துவமனைக்குக்
கொண்டுச் செல்லப்பட்டன. இச்சம்பவங்களை திடீர் மரணம் என
வகைப்படுத்தியுள்ள போலீசார் இதன் தொடர்பில் விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.


Pengarang :