NATIONAL

மாநிலத் தேர்தல்- மூன்று மாநிலங்களை தக்கவைத்துக் கொள்ள ஹராப்பான் நம்பிக்கை

சிரம்பான், ஜூலை 5- விரைவில் நடைபெற இருக்கும் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணியின் ஒத்துழைப்புடன் சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என பக்கத்தான் ஹராப்பான் நம்புகிறது.

நடப்பு அரசு நிர்வாகம் மீது அதிகமான வாக்காளர்கள் திருப்தி கொண்டுள்ளதை ஹராப்பான் வசமுள்ள சம்பந்தப்பட்ட மூன்று மாநிலங்களில் மாதாந்திர அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு காட்டுகிறது என்று கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி கூறினார்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் தலைமையிலான நெகிரி செம்பிலான் அரசாங்கம் மிக அதிகமாக அதாவது 75 விழுக்காட்டுப் புள்ளிகளை  பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

கடந்த ஜனவரி  முதல் மே மாதம் வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வின் போது நடப்பு அரசாங்கத்தை ஆதரிக்கிறீர்களா? அரசு நிர்வாகம் மீது திருப்தி கொள்கிறீர்களா என்ற இரு கேள்விகள் முன்வைக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலானில் உள்ள 75 விழுக்காடு வாக்காளர்கள் நடப்பு அரசாங்கம் மீது தாங்கள் திருப்தி கொள்வதாக கூறினர். ஆறு மாநிலங்களில் பெறப்பட்ட புள்ளிகளில் இதுவே அதிகமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள சிக்காமாட் தொகுதியில் நேற்றிரவு நடைபெற்ற மடாணி பிரசாரப் பயணத் தொடரின் போது அவர் இதனைக் கூறினார்.

இந்த ஆய்வு தொடர்பான இதர தரவுகள் அல்லது  மற்ற மாநிலங்களின் ஆதரவு விழுக்காடு குறித்து ரபிஸி எதுவும் குறிப்பிடவில்லை. வாக்காளர்கள் குறிப்பாக 30 வயதுக்கும் மேற்பட்டவர்கள் காட்டி வரும் ஆதரவு மிகுந்த நம்பிக்கை தருவதாக உள்ளது என அவர் சொன்னார்.


Pengarang :