கோலாலம்பூர், ஜூலை 5 – இணையக் குற்றங்களை தடுக்க தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சகம், (KKD) மெட்டா பிளாட்ஃபார்ம் (Meta), மலேசியன் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் மல்டிமீடியா கமிஷன் மற்றும் ராயல் மலேசியா காவல்துறை (PDRM) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும்.
இணைய மோசடி மற்றும் சூதாட்ட வழக்குகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என அதன் அமைச்சர், ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
“மெட்டா தளங்கள் (பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்) மூலம் இவ்வாண்டு ஜனவரி முதல் மே வரை மலேசியர்கள் அடைந்த இழப்புகள் கிட்டத்தட்ட RM330 மில்லியனைத் தாண்டியுள்ளது.
2022 ஆம் ஆண்டு முழுவதும் ஒப்பிடும்போது இது 25 சதவீதம் அதிகமாகும்,” என்று நேற்று, புக்கிட் அமானில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் மெட்டா, எம்சிஎம்சி மற்றும் பிடிஆர்எம் உடனான கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அவர் முகநூல் மூலம் இதனைத் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்வில் KKD துணை அமைச்சர் தியோ நீ சிங், அமைச்சகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மா சிவநேசன், MCMC தலைவர் டான்ஸ்ரீ சலீம் ஃபதே டின், சைபர் செக்யூரிட்டி மலேசியாவின் தலைமை செயல் அதிகாரி டத்தோ அமிருடின் அப்துல் வஹாப், ஜெனரல் இன்ஸ்பெக்டர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் மற்றும் PDRM உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இணையக் குற்றங்களை தடுக்க எம்சிஎம்சி மற்றும் பிடிஆர்எம் இருந்து ஒத்துழைப்பைப் பெற மெட்டா தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதாக ஃபஹ்மி கூறினார்.
– பெர்னாமா