NATIONAL

பத்தாங் காலி ஆற்றில் விழுந்து சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கோலாலம்பூர், ஜூலை 6: உலு சிலாங்கூர், டேசா ஆலம் ரியா அருகில் உள்ள பத்தாங் காலி ஆற்றில் விழுந்து ஏழு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நேற்று (புதன்கிழமை) இரவு 7.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகச் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் வான் எம்டி ரசாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட அச்சிறுவன் அகமட் அம்மார் அக்தர் தாஜுல் அஸ்வா என அடையாளம் காணப்பட்டான்.

“அச்சிறுவன் விழுந்திருக்கலாம் என்று அஞ்சப்படும் பகுதியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஆற்றில் ‘நீர் மேற்பரப்பு தேடுதல்’ நுட்பத்தைப் பயன்படுத்தி மீட்புப் பணியாளர்களால் தேடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

தேடுதல் மற்றும் மீட்பு (எஸ்ஏஆர்) பணி இரவு 11.30 மணிக்கு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், இன்று காலை (ஜூலை 6) மீண்டும் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :