NATIONAL

குப்பைக் குவியலுக்கு மத்தியில் கேன்வாஸ் பையில் இரு உடல்கள் கண்டுபிடிப்பு

மலாக்கா, ஜூலை 11- செங் நகரின்
கம்போங் உஜோங் பாடாங்கில் உள்ள
குப்பைக் கொட்டும் பகுதிக்கு அருகே
இரண்டு கேன்வாஸ் பைகளில் இருவரின்
உடல்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டன.

நேற்று காலை 9.00 மணியளவில்,
மளிகைப் பொருட்களை விநியோகம்
செய்யும் 35 வயது நபர் சாலையோரம்
உள்ள புதரில் சடலங்கள் அடங்கிய பொட்டலம்
கிடப்பதைக் கண்டு போலீசாருக்குத்
தகவல் அளித்ததாக மலாக்கா தெங்கா
மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிபி
கிறிஸ்டோபர் பாடிட் கூறினார்.

முதல் உடலுக்கு அடுத்த கேன்வாஸில்
இரண்டாவது உடல் கண்டெடுக்கப்பட்ட
நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்ட
பரிசோதனையில் ஒருவரின் உடல் டி
சட்டை மற்றும் அரைக்கால் ஜீன்சுடன்
காணப்பட்ட வேளையில் மற்றொரு
உடல் சட்டையின்றி ஜீன்சுடன் மட்டும்
காணப்பட்டது என்று அவர் ஓர்
அறிக்கையில் தெரிவித்தார்.

இரண்டு சடலங்களும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனக்
கூறிய அவர், அவ்விரு உடல்களிலும் அடையாள ஆவணங்கள் எதுவும்
தென்படவில்லை எனவும் தெரிவித்தார்.

உடலின் நிலையின் அடிப்படையில், அவ்விருவரும் இரண்டு அல்லது மூன்று
நாட்களுக்கு முன்பு மற்றொரு இடத்தில் இறந்து பின்னர் அவர்களின் உடல்
கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் வீசப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது
என்று கிறிஸ்டோபர் கூறினார்.


Pengarang :