கோலாலம்பூர், ஜூலை 12- ஓம்ஸ் அறவாரியம், மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறை ஆதரவோடு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்று நடத்தும்n செம்மொழியான தமிழ் மொழியின் 11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மிகச்சிறந்த மாநாடாக புகழ் பெறும் என்று மனிதவள அமைச்சரும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவருமான வ.சிவகுமார் தெரிவித்தார்.
இதுவரை 10 தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன.
இப்போது நடைபெறும் 11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மிகச் சிறந்த மாநாடாக வரலாற்றில் முத்திரை பதிக்கும் என்று அவர் சொன்னார்.
வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை மலாயா பல்கலைக்கழகத்தில் வேந்தர் அரங்கில் மிகப்பெரிய அளவில் 11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறுகிறது.
வரும் ஜூலை 22 ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு இந்த மாநாட்டை
மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார். தமிழ் நாடு அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி உட்பட நான்கு அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா, துபாய், சீனா, கனடா, பிரான்ஸ், ஜப்பான் உட்பட பல நாடுகளில் இருந்து பேராளர்கள் பெரும் அளவில் கலந்து கொள்கிறார்கள் என்றார் அவர்.
இதனிடையே, மாநாடு நடைபெற இன்னும் சில தினங்களே இருப்பதால் ஏற்பாட்டு பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது என்று மாநாட்டின் நிர்வாக குழு தலைவர் செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் தெரிவித்தார்.