கோம்பாக், ஜூலை 27: மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் (பிஆர்என்) வெற்றி பெற்றால், உலு கிள்ளாங் தொகுதியில் குடியிருப்பாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
அத்தொகுதியில் ஒவ்வொரு உறுப்பினரும் வளமான வாழ்வை அனுபவிப்பதை உறுதிசெய்ய சாலைகள் உள்ளிட்ட பொது வசதிகளும் மேம்படுத்தப்படும் என்று புக்கிட் மெலாவத்தி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஜுவைரியா சுல்கிப்லி கூறினார்.
“இந்தப் பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் வாழ்வு மேம்பாடு மற்றும் ஏழ்மை ஒழிப்பில் அதிக கவனம் செலுத்தப்படும்.
இன்று கம்போங் கெமென்சாவில் நடைபெற்ற கோம்பாக் நாடாளுமன்றத்தின் ஜெலஜா எஹ்சான் ரஹ்மா விற்பனைத் திட்டத்தில் சந்தித்த போது ஜுவைரியா இவ்வாறு கூறினார்.
மலிவு விலையில் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்காக கலந்துகொண்ட 400க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுடன் நட்பு முறையில் சந்தித்து உரையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
“மாநில அரசு இந்த திட்டத்தை தொடரும், ஏனெனில் இது ஏழை மக்களுக்கு மிகவும் உகந்த திட்டமாகும். குறிப்பாக இல்லத்தரசிகள் அவர்களின் தினசரி சமையல் செலவுகளை கட்டுப்படுத்த ஏற்ற திட்டம் இது என்பதால் அவர்கள் அதை அதிகம் விரும்புகிறார்கள். நாங்கள் இந்த திட்டத்தை உலு கிள்ளாங் உட்பட மற்ற இடங்களிலும் தொடருவோம்,” என்று அவர் மேலும் கூறினார்.