NATIONAL

பேரரசருக்கு எதிராக நிந்தனைக்குரிய கருத்துகளைப் பதிவிட்ட நபர் கைது

கோலாலம்பூர், ஆக 16- மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான்
அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவுக்கு எதிரான
நிந்தனைக்குரிய மற்றும் அவமரியாதையான கருத்துகளை பேஸ்புக்
வாயிலாக வெளியிட்டதாக கூறப்படும் நபர் ஒருவரை போலீசார் கைது
செய்துள்ளனர்.

பகாங் மாநிலத்தின் பெராவில் கைது செய்யப்பட்ட 43 வயதுடை அந்நபர்
வரும் 18ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு விசாரணைக்காக தடுத்து
வைக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றப்பு புலனாய்வுத் துறையின்
இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுஹைலி முகமது ஜைன் கூறினார்.

@SamBanjar Perak என்ற பேஸ்புக் கணக்கின் உரிமையாளர் என
சந்தேகிக்கப்படும் அந்நபர் மாமன்னரைப் பற்றிய நிந்தனைக்குரிய மற்றும்
அவமரியாதையான கருத்துகளை பதிவிட்டுள்ளார் என நம்புகிறோம் என்று
அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

இந்த புகார் தொடர்பில் 1948ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் 4(1) பிரிவு
மற்றும் 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லுடகச் சட்டத்தின் 233வது
பிரிவு ஆகியவற்றின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்று
அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பாதுகாப்புக்கும் இன நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை
ஏற்படுத்தக்கூடிய 3ஆர் எனப்படும் இன,சமய மற்றும் ஆட்சியாளர்கள்
பற்றிய அவமரியாதையான கருத்துகளை வெளியிடுவதை தவிர்க்கும்படி
பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :